செய்திகள்

ஈரோட்டில் தலையில் கல்லைப் போட்டு முதியவர் படுகொலை

Published On 2017-09-18 11:37 GMT   |   Update On 2017-09-18 11:37 GMT
ஈரோட்டில் இன்று காலை பட்டப்பகலில் முதியவர் ஒருவர் தலையில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

ஈரோடு:

ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம் பாளையம் பிரிவு கணபதி நகரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் கல்லால் பலமாக தாக்கி உள்ளனர். இதனால் தலை முழுவதும் சிதைந்து ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது.

இன்ற காலை 9 மணியளவில் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என தெரிகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வீரப்பன்சத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த முதியவர் உடலை பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? என்று உடனடியாக தெரியவில்லை. அவர் வெள்ளை கலர் கோடு போட்ட முழுக்கை சட்டையும், மெரூன்கலர் பேண்டும் அணிந்திருந்தார். அவர் அந்த பகுதியை சேர்ந்தவரா? அல்லது வெளியூரை சேர்ந்தவரா? என தெரியவில்லை.

அவரை கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார்? என்றும் தெரியவில்லை. முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் துப்பறியும் போலீஸ் மோப்ப நாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அதுகொலை நடந்த இடத்திலிருந்து 1½ கிலோ மீட்டர் தூரம் ஓடியது. பிறகு ஒரு ஆட்டோவை சுற்றி வந்தது. மீண்டும் கொலை நடந்த இடத்துக்கே வந்து விட்டது.

இதனால் கொலையாளிகள் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட முதியவர் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News