செய்திகள்

வேதாரண்யம் அருகே அடகு கடையில் 25 பவுன் நகை கொள்ளை

Published On 2017-09-17 12:32 GMT   |   Update On 2017-09-17 12:32 GMT
வேதாரண்யம் அருகே அடகு கடையில் 25 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு மேற்கு பவர் ஹவுஸ் அருகில் அடகு கடை நடத்தி வருபவர் ராதாகிருஷ்ணன் (வயது 62). இவர் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளையன் நள்ளிரவு கடையில் போடப்பட்டிருந்த 4 பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று உள்ளான்.

பின்னர் அங்கு நகை வைக்க லாக்கரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டான். இன்று காலை அக்கம் பக்கத்தில் உள்ள கடைகாரர்கள் அடகு கடையில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கடைக்கு வந்த ராதாகிருஷ்ணன் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுபற்றி அவர் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையில் உள்ள காமிராவை பார்வையிட்டனர். அது செயல்படவில்லை. உடனே பக்கத்து கடையில் உள்ள காமிராவில் பார்த்தபோது இரவு 1 மணியளவில் மர்ம நபர் முகத்தை துணியால் மறைத்து கொண்டு வந்து அடகு கடையில் கொள்ளையில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது.

மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையனின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. மோப்ப நாய் மூலம் துப்பு துலங்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த கொள்ளை தொடர்பாக வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News