செய்திகள்
கொலை செய்யப்பட்ட நர்சு திவ்யா, கைதான சித்ரா

பண்ருட்டி அருகே காதலர்களை அபகரித்ததால் நர்சை கொன்று புதைத்த தோழி

Published On 2017-07-21 10:32 IST   |   Update On 2017-07-21 10:32:00 IST
பண்ருட்டி அருகே காதலர்களை அபகரித்ததால் நர்சை கொன்று புதைத்த தோழி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலியூர் காட்டுசாகையை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் திவ்யா (வயது 19). நர்சிங் படித்து முடித்து உள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவ்யா வேலையை விட்டு நின்று விட்டார். பின்னர் அவர் பண்ருட்டி அடுத்த சாத்தமாம்பட்டில் உள்ள தனது சித்தி ஜெகதீஷ்வரி என்பவருடன் வசித்து வந்தார்.

திவ்யா முண்டியம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்த போது அதே கல்லூரியில் படித்த கீழ்காங்கயன்குப்பத்தைச் சேர்ந்த சித்ரா என்பவருடன் அறிமுகமானார். பின்னர் இருவரும் நெருங்கிய தோழிகளாக ஆனார்கள். நர்சிங் படித்து முடித்த பின்னரும் அவர்களது நட்பு தொடர்ந்து நீடித்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 8-ந்தேதி திவ்யா தனது சித்தியிடம் சென்னை செல்வதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த ஜெகதீஷ்வரி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது திவ்யா செல்போனில் யாருடன் பேசினார்? என்பது குறித்து விசாரித்த போது அவரது தோழி சித்ராவுடன் பேசியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சித்ராவை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது காதலனுடன் சேர்ந்து தோழி திவ்யாவை கொலை செய்து ஆற்றில் புதைத்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சித்ராவை கைது செய்தனர். அப்போது திவ்யாவை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து சித்ரா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு, திருவாம்பூரைச் சேர்ந்த தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வரும் மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தோம்.

மேலும் எனக்கு ஆனந்தூரைச் சேர்ந்த விஜயராஜ் (22) என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்து வந்தேன்.

இந்த நிலையில் எனது தோழி சித்ரா எனக்கு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை என்று என்னிடம் கூறினார். அப்போது நான் விஜயராஜை, திவ்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். பின்னர் திவ்யா எனக்கு தெரியாமல் விஜயராஜை தனிமையில் சந்தித்து அவருடன் நெருக்கமாக இருந்து வந்தாள்.

மேலும் அவள் எனது காதலன் மோகனுடனும் தொடர்பு வைத்து அவருடனும் நெருங்கி பழகி வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக சித்ராவிடம் எனது காதலர்களை விட்டு விடு. அவர்களிடம் பழகாதே என்று பலமுறை எச்சரித்தேன். ஆனால், திவ்யா அதை கேட்கவில்லை. எனக்கு தெரியாமல் மீண்டும் மீண்டும் அவர்களுடன் பேசி வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் திவ்யாவை கொலை செய்ய திட்டமிட்டேன். இது குறித்து எனது காதலன் மோகனிடம் கூறினேன். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் நான் திவ்யாவுக்கு போன் செய்து சென்னையில் வேலை வாங்கி தருகிறேன். உடனே பண்ருட்டிக்கு வா என்று கடந்த 8-ந்தேதி அழைத்தேன். திவ்யாவும் அதை நம்பி வந்தாள்.

பின்னர் மோகன், நான் (சித்ரா), திவ்யா ஆகிய 3 பேரும் பண்ருட்டியில் உள்ள ஒரு மது கடைக்கு சென்று 5 பீர் பாட்டில் வாங்கினோம். திவ்யாவை கொல்வதற்காக வி‌ஷ பாட்டிலும் வாங்கி வைத்திருந்தோம்.

பின்னர் திவ்யாவிடம் நாம் சென்னை செல்வதற்கு முன்பு கெடிலம் ஆற்றுக்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு செல்லலாம் என்று கூறினேன். அதற்கு திவ்யா முதலில் மறுத்தாள். பின்னர் ஒத்துக்கொண்டாள்.

கெடிலம் ஆற்றங்கரை சென்ற நாங்கள் திவ்யாவுக்கு தெரியாமல் பீர் பாட்டிலில் வி‌ஷத்தை கலக்கினோம். அதன் பின்னர் திவ்யாவுக்கு மதுவை கொடுத்தோம். அவளும் வாங்கி குடித்தாள். அவளுடன் சேர்ந்து நாங்களும் மது குடிப்பது போல் நடித்தோம். மது குடித்த சிறிது நேரத்தில் திவ்யா மயங்கி விழுந்தாள்.

ஆனால், அவள் இறக்கவில்லை. இதனால் நான் எனது துப்பட்டாவால் அவளது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் நானும், மோகனும் ஆற்றங்கரையில் குழி தோண்டி திவ்யாவின் பிணத்தை புதைத்தோம்.

திவ்யாவை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து வந்தேன். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு சித்ரா கூறியுள்ளார்.

அதன்படி கொலை செய்து புதைக்கப்பட்ட திவ்யாவின் உடலை தாசில்தார் விஜய்ஆனந்த் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் ஆற்றில் வைத்தே புதுவை டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து திவ்யாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திவ்யாவை கொலை செய்த சித்ராவின் காதலன் மோகன் தலைமறைவாகி விட்டான். இதனை தொடர்ந்து அவனை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தனிப்படை ஒன்று அமைத்தார்.

இந்த தனிப்படையில் டெல்டா போலீசார் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சித்ராவின் காதலன் மோகன் கோவையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

நேற்று இரவு கோவை விரைந்து சென்ற தனிப்படையினர் அங்கு பதுங்கி இருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News