செய்திகள்
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-07-19 09:01 GMT   |   Update On 2017-07-19 09:01 GMT
விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொதுமக்கள் கூறினர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அக்கறைவெளி, ஏனாதிமேடு, சித்தலூர், சாவடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாளிகை கோட்டத்தில் இருந்த டாஸ்மாக் கடைக்கு பதிலாக அக்கறைவெளியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடந்தது.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சியை அதிகாரிகள் கைவிடவில்லை.

இந்த நிலையில் நேற்று அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த அக்கறைவெளி, ஏனாதிமேடு, சித்தலூர், சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த மக்கள் பா.ம.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க. நகர செயலாளர் முத்துகுமார், நகர தலைவர் துரை ஆகியோர் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கலால் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே இந்த கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Tags:    

Similar News