செய்திகள்

நெய்வேலி அருகே வடலூரை சேர்ந்த வாலிபர் அடித்துக்கொலை?: போலீசார் விசாரணை

Published On 2017-06-26 16:35 IST   |   Update On 2017-06-26 16:35:00 IST
நெய்வேலி அருகே வடலூரை சேர்ந்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த வடலூர் ஜோதிநகர் பகு தியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 41). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் வீட்டில் இருந்து நேற்று மாலை நெய்வேலி சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு நெய்வேலி மந்தாரக்குப்பம் தபால் நிலையம் அருகே சுப்பிரமணியன் பிணமாக கிடந்தார். அவர் காதில் இருந்து ரத்தம் வழிந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News