செய்திகள்

பொன்னமராவதியில் சுவாரஸ்யம்: குழாயை திறந்து நீர் அருந்தும் ஆடு

Published On 2017-05-28 15:17 GMT   |   Update On 2017-05-28 15:17 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தண்ணீர் குழாயை திறந்து ஒரு ஆடு நீர் அருந்துவது பொதுமக்களிடையே வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னமராவதி:

தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் நீர் இல்லாததாலும் டெல்டா பகுதியில் கடும் வறட்சி நிலவுவதோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி கால் நடைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து குடிநீருக்காக மான், யானை போன்ற வன விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தண்ணீர் அருந்தி செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமூக வலைதளங்களில் குரங்குகள், பறவைகள் தாகத்தை தீர்க்க குடிநீர் குழாயில் நீர் அருந்துவது போன்ற படங்கள் வலம் வந்துள்ளன.

தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தண்ணீர் குழாயை திறந்து ஒரு ஆடு நீர் அருந்துவது பொதுமக்களிடையே வியப் பினை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் எதிரே பேரூராட்சியின் சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த குடிநீர்தொட்டியை ஆடு ஒன்று தனது தலையால் குழாயை திறந்து நீர் அருந்தி செல்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த ஆடு தினமும் இக்குடிநீர் குழாயை தேடி வந்து நீர் அருந்தி செல்கிறது.

இது அப்பகுதி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News