26-வது நினைவு தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங். தலைவர்கள் அஞ்சலி
ஸ்ரீபெரும்புதூர்:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-ம் ஆண்டு நினைவு நாள் இன்று ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி ராஜீவ் காந்தி உருவம் பொறிக்கப்பட்ட நினைவு இடம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இளநீர், தர்பூசணி, பழ வகைகள், தோசை, குளிர்பானங்கள் படைக்கப்பட்டு இருந்தன.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு.
மாவட்ட தலைவர் சிவராமன், முன்னாள் நகர தலைவர் அருள்ராஜ், நிர்வாகி அசோகன் உள்ளிட்ட ஏராளமானோர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு சர்வமத பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ராஜீவ் காந்தி நினைவு இடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ரத்ததானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொண்டர்கள் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.