செய்திகள்

புதுக்கோட்டை அருகே காண்டிராக்டர் வீட்டில் 43 பவுன் நகை கொள்ளை

Published On 2017-04-12 17:09 IST   |   Update On 2017-04-12 17:09:00 IST
புதுக்கோட்டை அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து 43 பவுன் நகையை திருடி சென்றனர்.
திருவரங்குளம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மேட்டுப்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் சோலை (வயது 40). கட்டிட காண்டிராக்டரான இவர் சென்ட்ரிங் தொழிலும் செய்து வருகிறார்.

தற்போது இவரது ஒப்பந்தத்தில் திருவரங்குளம் மற்றும் புதுக்கோட்டை பகுதியில் பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தினமும் காலையில் வீட்டில் இருந்து புறப்படும் சோலை கட்டிட பணிகளை மேற்பார்வை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்புவார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவர் புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்த அவரது மனைவி அருகில் நடைபெற்று வரும் மற்றொரு கட்டிட பணியை பார்ப்பதற்காக சாவி போடாமல் தற்காலிமாக வீட்டு கதவை பூட்டிவிட்டு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கதவை திறந்து வீட்டிற்கு புகுந்தனர். பின்னர் அங்கு தனி அறையில் இருந்த பீரோவையும் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 43 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.

இரவில் வீடு திரும்பிய சோலை மற்றும் அவரது குடும்பத்தினர் நகை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் யாராவது வீட்டிற்கு வந்து சென்றார்களா? என கேட்டனர். ஆனால் யாரும் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து சோலை நள்ளிரவில் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

தெரிந்த நபர்களே இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் வசிப்பவர்கள், உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News