செய்திகள்

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர் கைது

Published On 2017-03-31 15:08 IST   |   Update On 2017-03-31 15:08:00 IST
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரும், இலங்கைக்கு போதைபொருள் கடத்த முயன்றவரும் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம்:

துபாயில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு எம்ரேட்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த வடகால் (வயது 29) என்ற பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர் 13 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 40 லட்சம் ஆகும். அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து வடகால் என்பவரை கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கொழும்பு செல்லும் தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

இந்த விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதில் ஏற வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இலங்கையை சேர்ந்த முனீர்பாஷா (32) என்ற பயணி வைத்திருந்த உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் 1 கிலோ எடை கொண்ட பால் பவுடர் டப்பா இருந்தது. அதை திறந்து பார்த்த போது பால் பவுடருக்கு பதில் ஹெராயின் போதை பொருள் இருந்தது. 1 கிலோ எடை கொண்ட போதை பொருளின் மதிப்பு ரூ. 2½ கோடி ஆகும். அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முனீர் பாஷாவிடம் விசாரித்த போது சுற்றுலா விசாவில் இந்தியா வந்து விட்டு சென்றது தெரிய வந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News