செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 73-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது

Published On 2017-01-12 13:14 IST   |   Update On 2017-01-12 13:14:00 IST
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 73-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது. பயணி ஒருவர் டிராலியை தள்ளும் போது கண்ணாடி கதவில் இடித்ததால் உடைந்து விழுந்துள்ளது.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. 72 முறை கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது.

இதனால் பயணிகள் ஒருவித அச்சத்துடனே விமான நிலையத்திற்குள் செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு 73-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் தானியங்கி கண்ணாடி கதவு திடீரென்று உடைந்து விழுந்தது.

சத்தம் கேட்டு பயணிகள், நர்சுகள் அலறியடித்து ஓடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் தற்செயலாக நடந்தது இல்லை. பயணி ஒருவர் டிராலியை தள்ளும் போது கண்ணாடி கதவில் இடித்ததால் உடைந்து விழுந்துள்ளது.

இது தொடர்பாக சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படும்” என்றார்.

Similar News