செய்திகள்

துரைப்பாக்கம் அருகே மாநகர பஸ்சில் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது

Published On 2016-12-29 15:00 IST   |   Update On 2016-12-29 15:00:00 IST
துரைப்பாக்கத்தை அடுத்த கந்தன்சாவடி அருகே மாநகர பஸ்சில் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது. டீசலை பொது மக்கள் பாத்திரத்தில் பிடித்து சென்றனர்.
திருவான்மியூர்:

திருவான்மியூரில் இருந்து கிழக்கு தாம்பரத்துக்கு இன்று காலை மாநகர பஸ் சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

துரைப்பாக்கத்தை அடுத்த கந்தன்சாவடி அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென டீசல் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது.

இதனை அறியாமல் டிரைவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். சாலையில் கொட்டிய டீசலால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 3 பேர் நிலைதடுமாறி அடுத்தடுத்து விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

பஸ்சில் இருந்து டீசல் கொட்டுவது குறித்து வாகன ஓட்டிகள் சிலர் பஸ் டிரைவருக்கு தெரிவித்தனர். உடனே பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கினார்.

அதிர்ச்சி அடைந்த பயணிகள் பீதியில் முண்டியடித்து கீழே இறங்கினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

பஸ்சில் இருந்து டீசல் கொட்டுவதை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர் பாத்திரத்தை கொண்டு வந்து பிடித்து சென்றனர். டீசல் வெளியேறுவதை தடுக்க முடியாமல் டிரைவரும் கண்டக்டரும் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.



இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் விரைந்து வந்து பஸ்சை அங்கிருந்து எடுத்து சென்றனர். டீசல் டேங்கில் இருந்து அனைத்து டீசலும் வெளியேறிவிட்டது.

டீசல் கொட்டியபோது தீப்பற்றாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மாநகர பஸ்சை ஆய்வு செய்து பயன்பாட்டுக்கு எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

Similar News