செய்திகள்

திருப்பத்தூர் அருகே வனப்பகுதியில் 50 டன் பாறை சரிந்து 2 வாலிபர்கள் பலி

Published On 2016-10-15 10:00 IST   |   Update On 2016-10-15 10:00:00 IST
திருப்பத்தூர் அருகே காட்டில் 50 டன் எடையுள்ள பாறை சரிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலியாகினர்.
திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 24). இவருடைய மைத்துனர்கள் விஜி (22), குமார் (20). இவர்கள் 2 பேரும் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். அதே கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (20).

இவர்கள் 4 பேரும் ஜவ்வாதுமலை காட்டில் உடும்பு, முயல், காட்டு எலிகள் உள்ளிட்ட சிறிய விலங்குகளை வேட்டையாடுவது வழக்கம். அதேபோல் காட்டில் விளையும் மூலிகை கிழங்குகளை குழி தோண்டி எடுத்தும், மலைத்தேன், கடுக்காய் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து விற்றும் பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வெங்கட்ராமன் உள்பட 4 பேரும் நேற்று ஜவ்வாதுமலை ஏழருவி முருகர் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சுமார் 50 டன் எடையுள்ள பாறை ஒன்றின் அடிப்பகுதியில் கிழங்குகளை குழி தோண்டி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பாறை நகர்ந்து உருண்டது.

இதனை பார்த்ததும் கிழங்கு தோண்டிய 4 பேரும் பதறி அடித்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து ஓட முயன்றனர். அதற்குள் பாறை விழுந்து அதன் அடியில் சிக்கி வெங்கட்ராமன், விஜி ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி பொதுமக்கள் உதவியுடன் வெங்கட்ராமன், விஜி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

காட்டுப்பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு செல்வதற்கு வழித்தடம் இல்லை. இதனால் பலியான 2 பேரின் உடல்களும் தூளி கட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை உறவினர்கள் சுமந்து கொண்டு சென்றனர்.

பிறகு, பிரேத பரிசோதனைக்காக உடல்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News