செய்திகள்
கொள்ளை சம்பவம் நடந்த உரக்கடை அதிபர் வீட்டை படத்தில் காணலாம்.

அரியலூரில் உரக்கடை அதிபரை கட்டிப்போட்டு ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2016-09-28 04:17 GMT   |   Update On 2016-09-28 04:17 GMT
அரியலூரில் இன்று காலை உரக்கடை அதிபர்- மனைவியை கட்டிப்போட்டு ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:

அரியலூர் டவுன் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 74). இவர் அவரது வீட்டின் முன்புறம் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றிரவு அவரது கடைக்கு 3 வாலிபர்கள் வந்து, உரம் மற்றும் பூச்சி மருந்து கேட்டனர்.

அப்போது சிவக்குமார், நான் கணக்கு வழக்குகளை முடித்து, கடையை பூட்டப்போகிறேன், எனவே நாளை காலை வந்து உரம் வாங்கி கொள்ளுங்கள் என்றார். இதையடுத்து அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை 3 வாலிபர்களும் சிவக்குமார் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் கதவை தட்டி உள்ளே இருந்த சிவக்குமாரை அழைத்தனர். கதவை திறந்து வெளியே வந்த சிவக்குமாரிடம், 3 பேரும் உரம் வாங்க வந்திருக்கிறோம் என்று கூறிய படி அவரிடம் பேசினர்.

திடீரென அவர்கள், சிவக்குமாரை வீட்டிற்குள் தள்ளி, அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்தனர். மேலும் சிவக்குமாரின் மனைவி ஞானம்மாள் (72) அணிந்திருந்த செயின், மோதிரத்தையும் பறித்தனர்.

பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி பீரோவை திறக்கக்கூறி, அதில் இருந்த ரூ.7½ லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். செல்லும்போது சிவக்குமாரையும், ஞானம்மாளையும் கட்டிப்போட்டு விட்டு சென்றனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும்.

இதனிடையே இன்று காலை வீட்டு வேலைக்காரி மாரியம்மாள் என்பவர் பணிக்கு செல்லும் போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடக்கவே, அவசரமாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது இருவரும் கட்டி போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கட்டுகளை அவிழ்த்து விட்டார்.

உடனே இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ வேலு, அண்ணாதுரை, சாகுல் அமீது ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் மூலம் சம்பவ இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News