செய்திகள்

அரியலூர் அருகே விபத்தில் 15 பேர் பலியான சம்பவம் தப்பியோடிய லாரி டிரைவர் கைது

Published On 2016-09-27 05:52 GMT   |   Update On 2016-09-27 05:52 GMT
அரியலூர் அருகே விபத்தில் 15 பேர் பலியான சம்பவத்தில் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 12 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்நிலையில் விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் உடையார்பாளையம் தெற்கு பரணம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் கார்த்திக் (26) தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்றிரவு அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே பலியான 15 பேரில் 8 பேரின் உடல்கள் ஒரு மயானத்திலும், 3 பேரின் உடல்கள் மற்றொரு மயானத்திலும் தகனம் செய்யப்பட்டது. வளர்மதி என்பவரின் உடல் உடையார்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது.




போக்குவரத்து போலீஸ்காரர் முருகையனின் மனைவி ராணி மற்றும் ராஜமாணிக்கம் மனைவி சரஸ்வதி ஆகியோரின் உடல்கள் அவர்களது சொந்த நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

செந்தாமரை என்பவரின் மகன் வெளிநாட்டில் இருந்து வருவதால், அவரின் உடல் இன்று கச்சிப்பெருமாள் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. ஒரே கிராமத்தில் 15 பேர் பலியானதால் அப்பகுதி பொதுமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Similar News