செய்திகள்

சிதம்பரம் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2016-09-21 10:46 IST   |   Update On 2016-09-21 10:46:00 IST
சிதம்பரம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
கடலூர்:

புதுவை அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரு காரில் சிதம்பரம் சென்றனர். அங்கு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நள்ளிரவில் புதுவைக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் அவர்கள் வந்தபோது கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நின்ற பனைமரத்தில் மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து புதுச்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டார். காயமடைந்த டிரைவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான 2 பேர் யார்? என்று விபரம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News