செய்திகள்
விபத்தில் காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரி சிகிச்சை பெறும் காட்சி.

சீர்காழி அருகே ஆட்டோ கவிழ்ந்து குழந்தை பலி

Published On 2016-09-14 11:56 IST   |   Update On 2016-09-14 11:56:00 IST
சீர்காழி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவயது ஆண்குழந்தை பலியானது.

சீர்காழி:

சீர்காழி அருகே மடவாமேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணா (வயது 20) . இவர் தனது ஒருவயது குழந்தை ஹர்சன் மற்றும் தனது உறவினர்களான சந்திரம்மாள் (55), சுந்தராம்பாள் (48), கண்ணகி (24), நந்தினி (30) ஆகியோருடன் பூம்புகாரில் உள்ள தனது உறவினர் ஒருவரது வீட்டின் புதுமனை புகுவிழாவிற்காக ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆட்டோவை புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஓட்டி சென்றுள்ளார்.

ஆட்டோ கூழலயார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ டிரைவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது ஆட்டோவை நிறுத்தாமல் செல்போன் பேசிக்கொண்டே ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார்.

பின்னால் அமர்ந்து வந்தவர்கள் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி செல்போன் பேசிவிட்டு ஆட்டோவை ஓட்டுமாறு கூறியுள்ளனர். அதனை கேட்காமல் அவர் தொடர்ந்து செல்போன் பேசிக்கொண்டே சென்றுள்ளார். செல்போன் பேசியவாறே ஆட்டோவை வளைவில் திருப்பியுள்ளார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி சென்றுவிட்டார்.

ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் அதில் மாட்டிக்கொண்டிருப்பதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆட்டோவில் இருந்தவர்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் பலத்த காயமடைந்திருந்தனர்.

உடனே அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த அருணாவின் ஒரு வயது குழந்தை ஹர்சன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. குழந்தை இறந்தது குறித்து தகவல் அறிந்த அருணா மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது அங்கு சுற்றி இருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவளைத்தது.

இந்த விபத்து குறித்து புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்.

Similar News