செய்திகள்

அந்தியூர் அருகே கர்நாடகா லாரியை நிறுத்தி தீ வைப்பு - போலீசார் விரைந்து சென்று அணைத்தனர்

Published On 2016-09-13 16:17 IST   |   Update On 2016-09-13 16:17:00 IST
அந்தியூர் அருகே கர்நாடகா லாரியை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு செல்ல வழி உள்ளது போல் அந்தியூர், தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லவும் வழி உள்ளது. இந்த வழியாக அதிக போக்குவரத்து இல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு பஸ்களும், லாரிகளும் சென்று வருகிறது.

கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் மாவட்டம் ராமபுரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். லாரி உரிமையாளர். கடந்த 4 நாட்களுக்கு முன் இவர் கர்நாடகாவில் இருந்து ஒரு டிரைவர் மூலம் மக்காச்சோளத்தை ஏற்றி பெருந்துறைக்கு அனுப்பி வைத்தார்.

டிரைவர் பெருந்துறையில் மக்காச்சோளத்தை இறக்கிவிட்டு திரும்பி வந்தார். இந்த நிலையில் காவிரிநீர் தொடர்பாக இரு மாநிலத்திலும் பதட்டம் நிலவி வருவதையொட்டி டிரைவர் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் நான்கு ரோட்டில் லாரியை நிறுத்தி வைத்து தனது உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார்.

லாரி உரிமையாளர் மாதேஸ்வரன் பிரச்சினை பெரிதாக நடப்பதற்கு முன் லாரியை எடுத்துவர எண்ணி நேற்று ஆப்பக்கூடல் வந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியை உரிமையாளர் மாதேஸ்வரனே எடுத்து கொண்டு அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா புறப்பட்டார்.

லாரி அந்தியூரை தாண்டி கெட்டிசமுத்திரம் ஏரி அருகே நேற்று இரவு சென்றபோது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் லாரியை நிறுத்தினர்.

பிறகு தாங்கள் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை லாரியின் முன்புற சீட்டில் ஊற்றினர். இதை மதேஸ்வரன் தடுத்ததால் அவரை தள்ளிவிட்டு சீட்டில் பொட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர்.

அப்போது பின்னால் வந்த மற்ற வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சீட்டில் பிடித்த தீயை உடனடியாக அணைத்தனர். தக்க சமயத்தில் தீயை அணைத்ததால் லாரி முழுவதும் தீ பிடிக்காமல் தப்பியது. எனினும் சீட் முழுவதும் எரிந்துவிட்டது.

அதன் பிறகு அந்த லாரி புறப்பட்டது. மாதேஸ்வரனுடன் 2 போலீசாரும் கூடவே சென்று கொள்ளேகால் வரை பாதுகாப்புடன் விட்டு விட்டு திரும்பி வந்தனர்.

Similar News