செய்திகள்

குவைத் சிறையில் புதுக்கோட்டை தொழிலாளி மர்ம மரணம்

Published On 2016-08-23 12:28 IST   |   Update On 2016-08-23 12:29:00 IST
புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி குவைத் சிறையில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் காரையூரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஷாஜகான் வேலைக்காக சென்றார். அங்கு தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அடி தடி வழக்கு ஒன்றில் சிக்கினார். இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

4 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர் நேற்று திடீரென மயக்கமடைந்தார். அவரை அங்குள்ள சிறைக்காவலர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் அதற்குள் ஷாஜகான் இறந்துவிட்டார்.

இது குறித்து காரையூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு குவைத் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஷாஜகானின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தனர்.

ஷாஜகான் சிறைக்காவலர்கள் தாக்கியதால் இறந்தாரா? அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தாரா? என்பது மர்மமாக உள்ளது. குவைத் சிறையில் புதுக்கோட்டை தொழிலாளி மரணமடைந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News