செய்திகள்

திருப்பாச்சேத்தி அருகே மாமியாரை கழுத்தை நெறித்து கொன்ற மருமகள் கைது

Published On 2016-07-12 10:35 IST   |   Update On 2016-07-12 10:35:00 IST
திருப்பாச்சேத்தி அருகே சொத்து பிரச்சனையில் மாமியாரை கழுத்தை நெறித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்பாச்சேத்தி:

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராக்கன். இவரது மனைவி பாக்கியம் (வயது65). இவருக்கும் இவரது மருமகள் ரேணுகாதேவிக்கும் சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று திருப்பாச்சேத்தியில் உள்ள படமாத்தூர் செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பாக்கியம் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா, இன்ஸ்பெக்டர் சேசு, பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் பாக்கியத்தின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் பாக்கியத்தின் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் ரேணுகா தேவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தான் உள்பட 3 பேர் சேர்ந்து பாக்கியத்தை கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ரேணுகாதேவியை கைது செய்தனர்.

Similar News