செய்திகள்

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் விரிவாக்கப்பணி: அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

Published On 2016-07-05 15:24 IST   |   Update On 2016-07-05 15:24:00 IST
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் விரிவாக்கம் தொடர்பான பணிகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் விரிவாக்கம் தொடர்பான பணிகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் மீன்வளத்துறை அமைச்சர்டி.ஜெயக்குமார் பேசும்போது கூறியதாவது:–

தமிழக முதல்-அமைச்சர் மீன் உற்பத்தியினை மாநில அளவில் உயர்த்தி தரமான மீன் உணவினை மக்களுக்கு வழங்கிடவும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மீன்பிடித் தொழிலில் சிறந்து விளங்கும் தளங்களில் நாகப்பட்டினமும் ஒன்றாகும். நாகப்பட்டினத்தில் மீன்பிடித் தொழில் சிறந்து விளங்குவதால் மீன்பிடி கலன்களின் எண்ணிக்கையும் அளவுகளும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இதனால் நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

கடந்த 2004-ம் வருடம் டிசம்பர் திங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகம் முற்றிலுமாக சேதமடைந்ததை தொடர்ந்து தமிழக அரசு மீனவ மக்களின் துயரினை நீக்கும் பொருட்டு உலக வங்கி நிதியுடன் 45.21 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியது.

நாகப்பட்டினம் கடுவையாற்றின் வடக்கு கரையில் கரையோர வசதிகளுடன் கூடிய 250 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் சுவர் அமைக்கப்பட்டது. தென்கரையில் கரையோர வசதிகளுடன் கூடிய 500 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கரையோர வசதிகள் அலுவலக கட்டிடம் வலை பின்னும் கூடம் ஏலக்கூடம் பொருள் பாதுகாப்பு கூடம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கழிப்பறை வசதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதி மற்றும் வடிகாலுடன் கூடிய சாலை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று கடுவையாற்றின் தென்கரையில் கூடுதலாக 450 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் சுவர் அமைத்திடவும், படகுகள் எளிதாக சென்றுவர ஆழப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மீன் விற்பனை கூடம், மீன்பிடி கலன்களை பழுது பார்க்கும் பொருட்டு சாய்வுதளம் கலன்களை ஏற்றி இறக்க வசதியாக 100 டன் கையாளக்கூடிய பளுதூக்கியும் மின்வசதி, சாலைவசதி, தண்ணீர்வசதி அனைத்தும் மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான அளவை பணிகள் மத்திய கடலோர பொறியியல் நிறுவனம் பெங்களுருவில மேற்கொள்ளப்பட்டு வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மக்களின் சமூக பொருளாதார நிலை சிறந்து விளங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி (சீர்காழி), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மாவட்ட ஊராட்சித்தலைவர் ஏ.கே.சந்திரசேகரன், நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், மீன்வளத்துறை தலைமை பொறியாளர் தங்கப்பிரகாசம், செயற் பொறியாளர் வீரமணி, இணை இயக்குனர் சுப்புராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Similar News