செய்திகள்

பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

Published On 2016-05-22 12:23 IST   |   Update On 2016-05-22 12:23:00 IST
பெரம்பலூர் அருகே குளிக்க சென்ற 2 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியானார்கள்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வாலிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்தார். இவரது மகன் ரியாஸ் (வயது 12). பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்துவந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் மகன் அப்ரோஸ் கான் (11). இவர் அயன் தோகைமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை ரியாஸ் மற்றும் அப்ரோஸ்கான் இருவரும் வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க வெல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். பின்னர் சிறுவர்கள் குளிக்க சென்ற கிணற்றின் அருகில் சென்று பார்த்தபோது சிறுவர்களின் உடைகள் அங்கு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் கிணற்றில் உள்ள நீரை மோட்டார் பம்பு மூலம் வெளியே எடுத்தனர். இதில் இன்று காலை 4 மணிக்கு ரியாஸ் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பலமணி நேர போராட்டத்துக்கு பின் காலை 9 மணிக்கு அப்ரோஸ்கான் உடல் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வேப்பந்தட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்களின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கறைய வைத்தது.

Similar News