ஐ.பி.எல். கோப்பையை விட பெரியது டெஸ்ட் தொடரை வெல்வது: சுப்மன் கில் பேட்டி
- இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு கேப்டனாக ஐ.பி.எல். கோப்பையை வெல்வது, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது - இவற்றில் எது பெரிது என கேட்டால், டெஸ்ட் தொடர் என்றுதான் சொல்வேன்.
ஏனெனில் ஒரு கேப்டனாக அடிக்கடி இங்கிலாந்துக்கு சென்று விளையாட வாய்ப்பு கிடைக்காது. அத்துடன், உங்களது தலைமுறை சிறந்த வீரர்கள் 2-3 சுற்றுப்பயணத்தில் மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் அப்படி இல்லை. ஆண்டுதோறும் நடக்கிறது. அதில் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வசப்படுத்துவது, ஐ.பி.எல். கோப்பையை வெல்வதை விட பெரியது, கவுரவமிக்கது என்பதே எனது கருத்து.
தற்போதைய இந்திய அணி போதிய அனுபவம் இல்லாதது என பேசுகிறார்கள். அதன் காரணமாக, எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லை. அதுவே எங்களுக்கு சாதகமான ஒரு அம்சம்தான். எங்களது மூத்த வீரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் உலகில் எங்கு சென்று விளையாடினாலும் வெற்றி பெற முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். அதையே நாங்களும் பின்பற்றுவோம்.
எனது கேப்டன்ஷிப் ஸ்டைல் எந்த மாதிரி இருக்கும் என்று கேட்கிறீர்கள். எனது கேப்டன்ஷிப் அணுகுமுறையை முழுமையாகப் பார்க்க ஆகஸ்டு வரை (கடைசி டெஸ்ட் நடக்கும் வரை) காத்திருங்கள் என தெரிவித்தார்.