கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா அபிஷேக் சர்மா? வெளியான தகவல்

Published On 2026-02-13 17:38 IST   |   Update On 2026-02-13 17:38:00 IST
  • அபிஷேக் சர்மா வயிற்று போக்கு, அஜீரணம் போன்ற சில பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வந்தார்.
  • பாகிஸ்தானுடன் வரும் 15-ம் தேதி இந்திய அணி மோதுகிறது.

டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை வரும் 15-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வயிற்று போக்கு, அஜீரணம் போன்ற சில பிரச்சனைகளால் அவதிப்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

அபிஷேக் சர்மா முழுமையாக குணமடைந்து விட்டபோதிலும் அவர் உடல் பலவீனமாக உள்ளதாக கூறப்படுகிறது. வயிற்று போக்குக்கு பிறகு உடல் எடை சில கிலோ குறைந்து விட்டதாக அபிஷேக் சர்மாவே தெரிவித்து இருக்கிறார்.

இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் கூறுகின்றன. நமீபியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு அபிஷேக் சர்மா ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மிஸ் ஆகலாம் என கேப்டன் சூர்யகுமார் கூறியிருந்தார்.

இதனால் அபிஷேக் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 100% விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. நமீபியாவுக்கு எதிராக சஞ்சு சாம்சன் சொதப்பினாலும் 3 சிக்சர்களுடன் 8 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். இதனால் அவரை கிஷான் கிஷனுடன் ஒப்பனிங்கில் விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News