கிரிக்கெட் (Cricket)

புதிய சாதனை படைக்குமா இந்தியா? நமீபியாவுடன் நாளை மோதல்

Published On 2026-02-11 13:57 IST   |   Update On 2026-02-11 13:57:00 IST
  • இந்திய அணி வங்க தேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.
  • நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

புதுடெல்லி:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்க டித்தது.

இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவை நாளை ( 12-ந் தேதி) எதிர் கொள்கிறது. டெல்லியில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இந்தியா அதிரடியை வெளிப்படுத்தவில்லை. இதற்கு ஆடுகள தன்மை தான் காரணம் என்று கூறப்பட்டது. நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் புதிய சாதனை படைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.

கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்ய குமார் யாதவ் ஒருவர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்க முடியும்.

உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக்அவுட் ஆனார். நாளைய போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை . அவர் இடம் பெறவில்லை என்றால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுவார்.

காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுகிறார். முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. வாஷிங்டன் சுந்தர் முழு உடல் தகுதி பெற்றாலும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

20 ஓவர் போட்டியில் இந்திய அணி நமீபியாவுடன் மோதுவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2021 உலக கோப்பையில் துபாயில் நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

நமீபியா அணி முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

முன்னதாக நாளை காலை 11 மணிக்கு பல்லேகலேவில் நடைபெறும் போட்டியில் பி பிரிவில் உள்ள இலங்கை-ஓமன் அணிகள் மோதுகின்றன.

இலங்கை 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. ஓமன் அணி தொடக்க போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்தது.

மாலை 3 மணிக்கு மும்பையில் நடைபெறும் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தொடக்க ஆட்டங்களில் தோற்றன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News