கிரிக்கெட் (Cricket)

ஷபாலி வர்மா, தீப்தி சர்மா அசத்தல்: தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

Published On 2025-11-02 20:26 IST   |   Update On 2025-11-02 20:29:00 IST
  • முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது.
  • ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 78 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார்.

நவி மும்பை:

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது. தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா சிறப்பான ஆட்டததை வெளிப்படுத்தினர்.

ஸ்மிருதி மந்தனா 58 பந்தில் 8 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 78 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்னும், ஹர்மன்பிரித் கவுர் 20 ரன்னும், அமன்ஜோத் கவுர் 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

6வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியில் மிரட்டியது. தீப்தி சர்மா அரை சதம் கடந்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 24 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. தீப்தி சர்மா 58 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News