கிரிக்கெட் (Cricket)

2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய மகளிர் அணி

Published On 2025-09-17 17:43 IST   |   Update On 2025-09-17 17:43:00 IST
  • இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஹர்லீன் தியோல் 10, கேப்டன் ஹர்மன்பிரித் கவூர் 17 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

இதனையடுத்து மந்தனாவுடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து தீப்தி சர்மா 40 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ராதா யாதவ் 6, அருந்ததி ரெட்டி 4 என அடுத்தடுத்து வெளியேறினார்.

இறுதியில் ரிச்சா கோஷ்- சினே ராணா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிச்சா கோஷ் 29, ராணா 24 ரன்கள் எடுத்து வெளியேற இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags:    

Similar News