சேவாக், தோனி உள்பட பல வீரர்களை இந்திய அணிக்கு கொடுத்த கிரிக்கெட் தாதா- கங்குலி பிறந்தநாள் ஸ்பெஷல்
- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆக்ரோஷமான கேப்டன் என்றழைக்கப்படுபவர் சவுரவ் கங்குலி.
- 2000-ம் ஆண்டுகளில் சூதாட்ட சர்ச்சையால் சிக்கித் தவித்த இந்திய அணியை மீட்டெடுத்தவர் கங்குலி.
கிரிக்கெட் ரசிகர்களால் "தாதா" என்று அன்பாக அழைக்கப்படுபவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. இவர் தனது 53-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய தேசிய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். தற்போது அவர் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், விஸ்டன் இந்தியாவின் தலையங்கக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
கொல்கத்தாவில் பிறந்த கங்குலி, தனது மூத்த சகோதரர் சினேஹாசிஷ் மூலம் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவ், சுனிஸ் கவாஸ்கர், சச்சின், தோனி என எத்தனையோ ஜாம்பவான்கள் வந்தாலும் இவர் ஒருவரின் பெயர் இடம்பெறாமல் அந்த பட்டியல் பூர்த்தி அடையாது. அவர்தான் 'கிரிக்கெட்டின் தாதா' என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலி.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆக்ரோஷமான கேப்டன் என்றழைக்கப்படும் கங்குலி இந்திய அணிக்கு புதிய பாய்ச்சலை கொண்டு வந்ததில் முக்கியமானவர்.
ரஞ்சி, துலீப் கோப்பை போன்ற முதல் தரப் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து 1992-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அறிமுகப் போட்டியில் சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். லார்ட்ஸில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
2000-ம் ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் பதவி விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2004 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றது.
2000-ம் ஆண்டுகளில் சூதாட்ட சர்ச்சையால் சிக்கித் தவித்த இந்திய அணியை மீட்டெடுத்து இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வ்ந்தார். இளம் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதையை நோக்கி திருப்பிய கங்குலி வெளிநாடுகளிலும் வெற்றி பெறக்கூடிய ஒரு வலிமையான அணியாக இந்தியாவை மாற்றினார்.
கூல் கேப்டன் என்றழைக்கப்படும் தோனியை அறிமுகப்படுத்தியவர் கங்குலி தான். தோனியின் திறமையைக் கண்டறிந்து அவருக்கு வாய்ப்பளித்ததில் கங்குலிக்கு முக்கியப் பங்கு உண்டு. பின்வரிசையில் களமிறங்கிய தோனியை முன்வரிசையில் ஆட வைத்து அவரின் வாழ்க்கையையே மாற்றியவர் கங்குலி.
மேலும் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைப் போன்ற பல ஸ்டார் வீரர்களை இந்திய அணியில் அறிமுகப்படுத்தி அவர்களையும், அணியையும் உச்சத்துக்கு கொண்டு சென்றவர் கங்குலி.
இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மைதானத்திலேயே சட்டையை கழற்றி ஆகரோஷமாக கொண்டாடினார்.
இதனையடுத்து 2002-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை அவர்கள் மண்ணில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. அப்போது கேப்டன் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் தனது சட்டையைக் கழற்றி கொண்டாடிய நிகழ்வு இன்றும் பேசப்பட்டு வருகிறது.
சிறந்த பேட்ஸ்மேன், பவுலராகவும் வலம் வந்த சவுரவ் கங்குலி வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற செய்த கேப்டன்களில் முக்கியமானவர். குறிப்பாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை இவரையே சேரும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், கங்குலி கிரிக்கெட்டிற்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சில காலம் பணியாற்றிய கங்குலி இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணமாக விளங்கினார்.
இந்திய கிரிக்கெட்டின் போக்கையே மாற்றிய கங்குலியின் ஆக்ரோஷமான பாணியும், தலைமைப் பண்பும், இளம் வீரர்களை ஊக்குவித்து, அணியை வலிமையாக்கியதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் நினைவு கூறப்படுகிறது.
ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்கள் (9-வது இடம்), இதில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது வீரர் (சச்சின் மற்றும் இன்சமாம் உல் ஹக்கிற்கு அடுத்து). அவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள். டெஸ்ட் போட்டிகளில் 49 போட்டிகளில் கேப்டனாக இருந்து 21 வெற்றிகளைப் பெற்றார்.