விளையாட்டு
விராட் கோலிக்கு ஓய்வு தேவை- ரவிசாஸ்திரி கருத்து
விராட் கோலியின் மூளை கிரிக்கெட் குறித்தே அதிகம் சிந்தித்து தளர்ந்துவிட்டது என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
மேலும் அவர் சமீபத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுப்பதற்கு தடுமாறி வருகிறார். இரண்டரை வருடங்களுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் விளாசவும் இல்லை.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலிக்கு தற்காலிக ஓய்வு தேவை என தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி கூறியதாவது:-
விராட் கோலி அதிகம் விளையாடிவிட்டார். யாருக்காவது ஓய்வு அளிக்க வேண்டும் என்றால் அது விராட் கோலிக்கு தான். என்னுடைய அனுபவத்தில் விராட் கோலிக்கு இன்னும் 6 முதல் 7 ஆண்டுகள் வரை கிரிக்கெட் வாழ்க்கை மீதம் இருக்கிறது.
அதில் அவர் திறம்பட விளையாட வேண்டும் என்றால் அவருக்கு கட்டாயமாக சில நாட்கள் ஓய்வு தேவை. அவருடைய மூளை கிரிக்கெட் குறித்தே அதிகம் சிந்தித்து தளர்ந்துவிட்டது. மீண்டும் புத்துணர்வு பெறுவதற்கு ஓய்வு எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை அவர் முதலில் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.