விளையாட்டு

உலக ரேபிட் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பிக்கு வெண்கல பதக்கம்

Published On 2025-12-29 11:30 IST   |   Update On 2025-12-29 11:30:00 IST
  • அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
  • இந்தியாவின் சவிதா ஸ்ரீ, வைஷாலி ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் 4-வது, 5-வது இடத்தை பெற்றனர்.

தோகா:

உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ரேபிட் வடிவிலான போட்டி 3 நாட்கள் நடந்தது.

இதில் 13 சுற்றுகளை கொண்ட ஓபன் பிரிவில் மொத்தம் 247 வீரர்கள் பங்கேற்றனர். 3-வது நாளான நேற்று கடைசி 4 சுற்று ஆட்டங்கள் நடந்தன. முந்தைய நாள் முடிவில் 3-வது இடத்தில் இருந்த 'நம்பர் ஒன்' வீரரான மாக்னஸ் கார்செல்ன் (நார்வே) கடைசி நாளில் வித்தையை காட்டினார். அலெக்சி சரனா (செர்பியா), ஹான்ஸ் நீமேன் (அமெரிக்கா), யஜிஸ் கான் எர்டாக்மஸ் (துருக்கி) ஆகியோரை வரிசையாக பதம் பார்த்தார்.

கடைசி ரவுண்டில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் 24-வது நகர்த்தலில் டிரா செய்ததுடன் முதலிடத்துக்கும் முன்னேறினார். அதே சமயம் 2-வது நாளில் 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ரஷியாவின் விளாடிஸ்லாவ் ஆர்ட்மீவ் தனது கடைசி 4 ரவுண்டுகளிலும் டிரா செய்ததால் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டார்.

13 சுற்று முடிவில் கார்ல்சென் 10½ புள்ளிகளுடன் (9 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி) முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தார். ரேபிட்டில் 6-வது முறையாக மகுடம் சூடிய அவருக்கு ரூ.74 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. ஒட்டுமொத்தத்தில் உலக போட்டியில் அவர் வென்ற 19-வது பட்டம் இதுவாகும்.

விளாடிஸ்லாவ் 9½ புள்ளிகளுடன் 2-வது இடத்தோடு அதற்குரிய ரூ.53 லட்சத்தையும், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 9½ புள்ளிகளுடன் 3-வது இடத்துடன் ரூ.38 லட்சத்தையும் பரிசாக பெற்றனர். எதிர்பார்க்கப்பட்ட கிளாசிக்கல் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 8½ புள்ளிகளுடன் (6 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி) 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா 8½ புள்ளிகளுடன் 28-வது இடத்தை பெற்றார்.

11 சுற்றுகளை கொண்ட இதன் பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா, சீனாவின் ஜூ ஜினெர், நடப்பு சாம்பியனான இந்தியாவின் கோனெரு ஹம்பி ஆகியோர் 6 வெற்றி, 5 டிரா என தலா 8½ புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர்.

இதில் கடினமான எதிராளியை சந்தித்து புள்ளி எடுத்தது, சராசரி ரேபிட் ரேட்டிங் புள்ளி அடிப்படையில் டாப்-2 இடங்களை உறுதி செய்த கோர்யாச்கினா, ஜூனெர் இடையே டைபிரேக்கர் நடத்தப்பட்டது. டைபிரேக்கரில் கோார்யாச்கினா 1½-½ என்ற புள்ளி கணக்கில் ஜூனெரை தோற்கடித்தார்.

முடிவில் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.42 லட்சம் பரிசாக கிடைத்தது. 2-வது இடத்தை ஜூ ஜினெரும், ஹம்பி 3-வது இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ.28½ லட்சம், ரூ.20 லட்சம் வீதம் பரிசாக கிடைத்தது. இந்தியாவின் சவிதா ஸ்ரீ, வைஷாலி ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் 4-வது, 5-வது இடத்தை பெற்றனர். திவ்ஷா தேஷ்முக் 8-வது இடத்தை (7½ புள்ளி) பிடித்தார்.

ரேபிட் போட்டி முடிந்த நிலையில் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி இன்றும், நாளையும் அதே இடத்தில் நடக்கிறது. இதில் ஓபன் பிரிவு 19 சுற்றுகளாகவும், பெண்கள் பிரிவு 15 சுற்றுகளாகவும் நடத்தப்படுகிறது. இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு வருவார்கள். ஒவ்வாரு ஆட்டமும் 3 நிமிடங்களை கொண்டது. அத்துடன் ஒவ்வொரு நகர்வுக்கும் 2 வினாடி வீதம் அதிகரிக்கப்படும்.

Tags:    

Similar News