விளையாட்டு
இந்திய அணி வீரர்கள் - சச்சின் தெண்டுல்கர்

உலக கோப்பையை வென்றது எனது வாழ்நாளில் சிறந்தது - ஆயிரமாவது போட்டி குறித்து தெண்டுல்கர் கருத்து

Published On 2022-02-05 06:59 GMT   |   Update On 2022-02-05 06:59 GMT
1000-வது போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்திய அணி 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது குறித்து கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் கூறியதாவது:-

இந்திய அணி நாளை 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இதில் விளையாடும் முதல் அணியாக இந்தியா இருப்பது அற்புதமான தருணமாக நான் நினைக்கிறேன். முன்னாள் வீரர்கள், இன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் என எல்லோரும் இதற்கு காரணமாக இருந்தனர். ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் இதற்கு பங்களிப்பாக இருந்தன.

2011-ல் உலக கோப்பையை கையில் ஏந்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்ததாகும். 24 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்ற இந்த தருணம் மிகவும் முக்கியமானது.

1983-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது என் வாழ்க்கையில் திருப்பு முனையாகும். இந்த போட்டியை பார்த்ததும்தான் எனக்கு கிரிக்கெட் மீதான உத்வேகம் ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010-ம் ஆண்டு குவாலியர் மைதானத்தில் இரட்டை சதம் அடித்தேன். ஒருநாள் சர்வதேச போட்டியில் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும். இதுவே எனது சிறந்த ஆட்டமாகும்.

ஏனென்றால் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சில் மிகவும் வலுவாக இருந்தது. சிறந்த அணிக்கு எதிராகவே முதல் முறையாக இரட்டை சதம் அடித்தேன். அதற்கு பிறகுதான் மற்ற வீரர்கள் இரட்டை சதம் அடித்தனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி சிறந்ததாகும். 1000-வது போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொடரை கைப்பற்ற வீரர்களை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News