செய்திகள்
சுரேஷ் ரெய்னா

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் யார்?

Published On 2021-11-25 08:39 GMT   |   Update On 2021-11-25 11:30 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னாவை கழற்றிவிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை:

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டித் தொடரில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு முன்பாக வீரர்கள் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் ஒரு வெளிநாட்டு வீரர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி தக்க வைக்கப்படுவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. மற்ற 3 வீரர்கள் யார்? என்பதில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் 3 வீரர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆகியோர் தக்கவைக்கப் படுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளிநாட்டு வீரர்களில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி தக்க வைக்கப்படலாம். அவர் சென்னை அணியில் இடம்பெற விரும்பவில்லை என்றால் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் 4-வது வீரராக தக்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல் மற்றொரு தொடக்க வீரரான டூபெலிசிஸ் தக்கவைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா சமீபத்தில் நடந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றி விடப்படுவார் என்று தெரிகிறது. இதையடுத்து அவரது பெயர் ஏலம் பட்டியலில் இடம் பெறும்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கேப்டன் ரி‌ஷப் பண்ட், அக்‌ஷர்படேல், பிரித்வி ஷா, நார்ஜே ஆகியோரும், மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோரும் தக்க வைக்கப்படுகிறார்கள். அந்த அணியில் பொல்லார்டும், இஷான்கி‌ஷனும் தக்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

புதிய அணியான லக்னோவுக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News