செய்திகள்
ரவிசாஸ்திரி

பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றார் ரவிசாஸ்திரி

Published On 2021-11-09 05:47 GMT   |   Update On 2021-11-09 05:47 GMT
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் ரவிசாஸ்திரி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பு ஏற்றார். 2019-ம் ஆண்டில் அவரது பதவி காலம் மேலும் 2 ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியுடனான அவரது 4 ஆண்டு கால பயிற்சி பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நமிபியாவுக்கு எதிரான ஆட்டமே அவரது பயிற்சியின் கீழ் இந்தியா விளையாடிய கடைசி போட்டியாகும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு வருகிற 17-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து தனது பணியை தொடங்குகிறார்.

59 வயதான ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி எந்த ஐ.சி.சி. கோப்பையையும் வெல்லவில்லை. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியோடு வெளியேறியது. இந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியை கூட எட்டவில்லை.

அதே சமயம் அவரது பயிற்சியின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மகத்தான எழுச்சி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இதுவரை எந்த ஆசிய அணியும் செய்யாத வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியது. 42 மாதங்கள் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’ அரியணையை வகித்தது. அவரது பயிற்சியில் இந்திய அணி 43 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றியும், 76 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 51-ல் வெற்றியும் பெற்றது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் அடுத்து அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.
Tags:    

Similar News