செய்திகள்
விராட் கோலி

கே.எஸ்.பரத்தின் ஆட்டம் அருமையாக இருந்தது - விராட் கோலி பாராட்டு

Published On 2021-10-09 06:52 GMT   |   Update On 2021-10-09 06:52 GMT
இந்த போட்டித்தொடரில் நாங்கள் அதிகமாக ரன் சேசிங் செய்யவில்லை என பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

துபாய்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை பெங்களூர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது.

இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 55 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. பின்னர் கே.எஸ்.பரத்-மேக்ஸ்வெல் ஜோடி சிறப்பாக ஆடியது.

பெங்களூர் அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. ஆவேஷ்கான் வீசிய அந்த பந்தில் கே.எஸ்.பரத் சிக்சர் அடித்தார். இதனால் பெங்களூர் த்ரில் வெற்றி பெற்றது. கே.எஸ்.பரத் 78 ரன்னும், மேக்ஸ்வெல் 51 ரன்னும் எடுத்தனர்.

வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இது நம்ப முடியாத வெற்றியாக இருந்தது. இந்த போட்டியால் நாங்கள் எதையும் இழக்க மாட்டோம் என்பது தெரியும். புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது நல்லதாகும்.

இந்த சீசனில் அவர்களை (டெல்லி) நாங்கள் 2 முறையும் தோற்கடித்து உள்ளோம். டிவில்லியர்ஸ், கே.எஸ்.பரத் ஜோடி முதலில் நன்றாக விளையாடியது. பின்னர் மேக்ஸ்வெல்-கே.எஸ்.பரத் ஜோடியின் பாட்னர்ஷிப் அருமையானது.

கே.எஸ்.பரத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3-வது வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாட முடியும் என்பதை நாங்கள் அறிவோம். அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாட கூடியவர்.

புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற 163 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது மிகவும் கடினமானது என்பதால் நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தோம். ரன் இலக்கை நோக்கி விளையாடி வெற்றி பெறுவது பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் போது உங்களுக்கு பலவிதமான நம்பிக்கையை அளிக்கும்.

இந்த போட்டித்தொடரில் நாங்கள் அதிகமாக ரன் சேசிங் செய்யவில்லை. இதனால் 2-வது பேட்டிங்கின் போது நாங்கள் சிறப்பாக விளையாடுவது முக்கியமானதாக இருந்தது.

நாங்கள் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் என்று நான் கண்டிப்பாக நினைக்கிறேன். ஏனென்றால் பிளே-ஆப் சுற்றுக்கு வரும் போது எந்த அணியும் உங்களுக்கு 2-வது வாய்ப்பை வழங்காது.

இவ்வாறு கோலி கூறினார்.

Tags:    

Similar News