செய்திகள்
வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஐசிசி தரவரிசையில் 2-வது இடம் பிடித்து சாதனை
சாஹிப் அல் ஹசன், அப்துர் ரசாக் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறிய வங்காளதேச வீரர் என்ற சாதனையை மெஹிதி ஹசன் பெற்றுள்ளார்.
இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் முதல் போட்டியில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டும் வீழ்த்தினார். இரண்டு போட்டிகளிலும் ஏழு விக்கெட் வீழ்த்திய அவர், ஐசிசி-யின் பந்து வீச்சாளருக்கான ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறினார்.
இதன்மூலம் ஐசிசி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றை பிடித்த 3-வது வங்காளதேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2009-ம் சாஹிப் அல் ஹசன் முதல் இடத்தையும், 2010-ல் அப்துர் ரசாக் 2-வது இடத்தையும் பிடித்திருந்தனர்.
முதல் இன்னிங்சில் 84 ரன்களும், 2-வது இன்னிங்சில் 125 ரன்களும் விளாசிய முஷ்பிகுர் ரஹ்மான் 14-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.