செய்திகள்
ஒலிம்பிக் சின்னம்

வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்

Published On 2021-03-20 15:05 GMT   |   Update On 2021-03-20 15:05 GMT
ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதாக போட்டி அமைப்பாளர்கள் கூறி உள்ளனர்.
டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதிவரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுவருகின்றன. போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், ஜப்பான் ஒலிம்பிக் போட்டியைக் காண வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் அரசு, சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி மற்றும் உள்ளூர் போட்டி அமைப்பாளர்கள் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்காக 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதாக போட்டி அமைப்பாளர்கள் கூறி உள்ளனர். 

இதேபோல் உள்நாட்டு ரசிகர்களுக்காக 44.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் மைதானங்களில் உள்நாட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News