செய்திகள்
ரித்திகா போகத்

இளம் மல்யுத்த வீராங்கனை மரணம்- போலீசார் விசாரணை

Published On 2021-03-19 15:37 IST   |   Update On 2021-03-19 15:37:00 IST
அரியானா மாநிலத்தில் இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகத் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சண்டிகர்:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த போகத் சகோதரிகளான கீதா போகத் மற்றும் பபிதா போகத் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் மல்யுத்த விளையாட்டில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், போகத் சகோதரிகளின் ஒன்றுவிட்ட சகோதரியும், இளம் மல்யுத்த வீராங்கனையுமான ரித்திகா போகத் (வயது 17) கடந்த திங்கட்கிழமை இரவு மரணம் அடைந்தார். 

அரியானா மாநிலம் சார்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள தனது மாமாவின் வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்த ரித்திகா, மல்யுத்த போட்டி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் மரணமடைந்துள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இந்த தகவலை அரியானா போலீசார் நேற்று அறிவித்தனர். 

ரித்திகா போகத் மரணம் குறித்து அரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம், போட்டியில் அடைந்த தோல்வியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக சார்கி தாத்ரி மாவட்ட எஸ்பி ராம் சிங் பிஷோனி தெரிவித்துள்ளார்.  

ரித்திகா போகத் மறைவுக்கு முன்னாள் மத்திய மந்திரி வி.கே.சிங் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Similar News