செய்திகள்
3 விக்கெட் வீழ்த்திய சிராஜ்

பாக்சிங் டே டெஸ்ட் - இந்தியா வெற்றி பெற 70 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

Published On 2020-12-29 02:10 GMT   |   Update On 2020-12-29 02:16 GMT
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 70 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
மெல்போர்ன்:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும்.

கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 ரன்னும், ஜடேஜா 57 ரன்னும் எடுத்தனர்.

ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் அவுட்டானார். கிரீன் 45 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட், அஷ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 70 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.
Tags:    

Similar News