செய்திகள்
இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 621 ரன்கள் குவிப்பு
செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 621 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 396 ரன்கள் குவித்தது. பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே அந்த அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரன்ரேட்டை நான்கிற்கு கீழ் குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர்.
டீன் எல்கர் 95 ரன்களும், எய்டன் மார்கிராம் 68 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளிஸ்சிஸ் 55 ரன்களுடனும், டெம்பா பவுமா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டு பிளிஸ்சிஸ், டெம்பா பவுமா சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். டு பிளிஸ்சிஸ் சதம் அடித்தார். டெம்ப பவுமா 71 ரன்னில் வெளியேறினார்.
கேஷவ் மகாராஜ் 73 ரன்கள் அடிக்கவும், டு பிளிஸ்சிஸ் இரட்டை சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 199 ரன்னில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இறுதியில் தென்ஆப்பிரிக்கா 621 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா 142.1 ஓவரிகள் விளையாடியது. ஓவருக்க சராசரியாக 4.37 ரன்கள் அடித்திருந்தது.
இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.