செய்திகள்
ஐபிஎல்.லில் விளையாடாததால் பாக். வீரர்கள் மிகப்பெரிய வாய்ப்பை இழந்து வருகின்றனர்: அப்ரிடி
உலகின் தலைசிறந்த டி20 லீக்கான ஐபிஎல் தொடரில் விளையாடாததால் பாகிஸ்தான் வீரர்கள் மிகப்பெரிய வாய்ப்பை இழக்கின்றனர் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் தொடர் தொடங்கப்பட்டது. அந்தத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். பெரும்பாலான வீரரகள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்தினர்.
ஆனால், எல்லையில் நடைபெற்று வரும் பதற்றமான சூழ்நிலையால் இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் ஐபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற முடியாமல் போனது. இது பாகிஸ்தான் வீரர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில் ‘‘பாகிஸ்தான் அரசு இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு எப்போதுமே தயாராக இருக்கிறது. ஆனால், தற்போதுள்ள அரசு இருக்கும் வரை அதற்கு வாய்ப்பு இல்லை. மோடி அரசு அதிகாரத்தில் இருக்கும்போது, இரு நாட்டுக்கும் இடையில் கிரிக்கெட் நடக்காது.
உலகளவில் ஐபிஎல் மிகப்பெரிய பிராண்ட் என்பது எனக்குத் தெரியும். நெருக்கடியான சூழ்நிலையின் கீழ் விளையாடுவது, வீரர்கள் அறைகளை பகிர்ந்து கொள்வது பாபர் அசாம் அல்லது பல பாகிஸ்தான் வீரர்களுக்கு சூப்பரான வாய்ப்பாகும். இதனால் என்னுடைய பார்வையில் பாகிஸ்தான் வீரர்கள் மிகப்பெரிய வாய்ப்பை தவற விடுகின்றனர்’’ என்றார்.