செய்திகள்
U19 உலக கோப்பை - நியூசிலாந்தை துவம்சம் செய்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது வங்காளதேசம்
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்து வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி களமிறங்கியது.
வங்காளதேசம் அணியினரின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
நியூசிலாந்து அணியில் பெக்காம் வீலர் கிரினால் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 75 ரன்னில் அவுட்டானார். நிகோலஸ் லிட்ஸ்டோன் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர்.
இறுதியில், நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தனர்.
வங்காளதேசம் அணி சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும், ஷமிம் உசேன், ஹசன் முராத் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் மகமுதுல் ஹசன் ஜோய் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 100 ரன்னில் அவுட்டானார். தவ்ஹித் ஹிரிதோய், ஷஹாதத் உசேன் ஆகியோர் தலா 40 ரன் எடுத்தனர்.
இறுதியில், வங்காளதேசம் அணி 44.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் வங்காளதேசம் முதல் முறையாக நுழைந்துள்ளது. இறுதிப்போட்டியில் வலுவான இந்திய அணியை வங்காளதேசம் எதிர்கொள்கிறது.