செய்திகள்
சத்னம் சிங்

இந்திய கூடைப்பந்து வீரர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்

Published On 2019-12-08 09:31 GMT   |   Update On 2019-12-08 09:31 GMT
என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டிக்கான அணியில் இடம் பிடித்த முதல் இந்திய வீரரான சத்னம் சிங் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.
இந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங் அமெரிக்காவில் நடத்தப்படும் புகழ்பெற்ற என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டிக்கான அணியில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

23 வயதான சத்னம் சிங்கிடம் தெற்காசிய விளையாட்டு போட்டிக்காக பெங்களூருவில் நடந்த பயிற்சி முகாமின் போது தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையினர் சிறுநீர் மாதிரி சேகரித்து பரிசோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் சத்னம் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சத்னம் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘நான் ஒருபோதும் ஊக்க மருந்து பயன்படுத்தியது கிடையாது.

தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2018-ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் 2019-ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை தகுதி சுற்று போட்டிக்கான இந்திய அணியில் சத்னம் சிங் இடம் பிடித்து இருந்தார். தெற்காசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த அவர் தனிப்பட்ட காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணையில் சத்னம் சிங் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News