செய்திகள்
உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பரிசு
ரஷியாவில் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு இன்று பரிசுகளை வழங்கினார்.
புதுடெல்லி:
ரஷியாவில் உலன் உடே நகரில் பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கமும், மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
இந்நிலையில், ரஷியாவில் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜுவை தலைநகர் டெல்லியில் இன்று சந்தித்தனர்.
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி வென்ற மஞ்சு ராணிக்கு 14 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்ற மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோருக்கு தலா 8 லட்சம் ரூபாயும் பரிசாக அளிக்கப்பட்டது.