செய்திகள்

ஊழல் தடுப்புப் பிரிவில் சனத் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டு- ஐசிசி அதிரடி

Published On 2018-10-15 17:32 IST   |   Update On 2018-10-15 17:32:00 IST
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சனத் ஜெயசூர்யா மீது ஐசிசி, ஊழல் தடுப்புப் பிரிவில் குற்றம் சுமத்தியுள்ளது. #Jayasuriya
இலங்கை அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சனத் ஜெயசூர்யா. ‘பவர் பிளே’ ஓவர்களில் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் எப்படி விளாச வேண்டும் என்பதை சர்வதேச போட்டியில் அடித்து காண்பித்தவர் ஜெயசூர்யா. 1996-ம் ஆண்டும் இலங்கை அணி உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தேசிய அணியின் தேர்வுக்குழு சேர்மனாக இருந்தார். 2013 முதல் 2015 வரையும், அதன்பின் 2017-ல் ராஜினாமா செய்யும் வரையிலும் சேர்மன் பதவியில் இருந்தார்.



இந்த காலக்கட்டத்தில் வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் சனத் ஜெயசூர்யா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு ஆஜராகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இன்றில் இருந்து இன்னும் இரண்டு வாரத்திற்குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.
Tags:    

Similar News