செய்திகள்

வெண்கல பதக்கத்தை தவறவிட்ட தமிழக வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கினார் ரதோர்

Published On 2018-09-06 15:07 GMT   |   Update On 2018-09-06 15:07 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட லட்சுமணன் கோவிந்தனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார் மத்திய அமைச்சர் ரதோர். #AsianGames2018
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. தடகளத்தில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டம் ஒட்டப் பந்தய இறுதிச் சுற்றிற்கு இந்தியா சார்பில் தமிழகத்தின் லட்சுமணன் கோவிந்தன் தகுதிப் பெற்றார். அவருடன் மேலும் 12 பேர் கலந்து தகுதி பெற்றனர்.

இதில் பஹ்ரைன் வீரர் ஹசன் சானி 28 நிமிடம் 35:54 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ரஹாம் செரோபென் 29 நிமிடம் 00:29 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன் 29 நிமிடம் 44:91 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணனின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் பதக்கம் வென்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதிர்ச்சிக்குள்ளானார்.



போட்டியின்போது, ஆடுகளத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு சற்று விலகி மற்றொரு பாதையில் அவர் கால்பதித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சர்வதேச தடகள சம்மேளன விதிகளின்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

லட்சுமணனின் தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய தரப்பில் போட்டி அமைப்பு குழுவில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அழைத்து பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார். விளையாட்டு அமைச்சகம் சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படடது.

இந்நிலையில் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்ல முடியாமல் போன லட்சுமணன் கோவிந்திற்கு பரிசு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரதோர் விரும்பினார். அதற்கான முயற்சியை எடுத்த ரதோர் தற்போது 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்த செய்தியை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News