செய்திகள்

மணிஷ் பாண்டே சதம் வீண்- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியிடம் வீழ்ந்தது இந்தியா ‘பி’

Published On 2018-08-27 15:12 GMT   |   Update On 2018-08-27 15:12 GMT
மணிஷ் பாண்டே சதம் அடித்தும் இந்தியா ‘பி’ அணி ஆஸ்திரேலியா ‘ஏ’விடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. #INDA
இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா பி - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘பி’ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் களம் இறங்கினார்கள். மயாங்க் அகர்வால் 36 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ஷுப்மான் கில் 4 ரன்னில் வெளியேறினார். ஆனால் கேப்டன் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 109 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 117 ரன்கள் குவிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்தது.



பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 24.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் நீண்ட நேர ஆட்டம் தடைபட்டது.

பின்னர் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 40 ஓவரில் 247 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 93 பந்தில் 101 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா ஏ 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News