செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் முரளி விஜய், கேஎல் ராகுல் ஜொலிப்பு- தொடக்க வீரர்கள் யார்?

Published On 2018-07-26 09:52 GMT   |   Update On 2018-07-26 09:52 GMT
எசக்ஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்து முரளி விஜய், விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் முத்திரை படைத்தனர். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா - எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஷிகர் தவான் ரன்ஏதும் எடுக்காமலும், புஜாரா 1 ரன்னிலும், ரகானே 17 ரன்னிலும் வெளியேறினார்கள். 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தாலும் முரளி விஜய் 53 ரன்களும், விராட் கோலி 68 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தனர்.

அடுத்து வந்த லோகேஷ் ராகுலும் 58 ரன்கள் சேர்த்தார். 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 82 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 33 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, முரளி விஜய், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்துள்ளனர். இதனால் ஆடும் லெவன் அணியில் யாரெல்லாம் இடம்பிடிப்பார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தொடக்க வீரர்களான களம் இறங்க இரண்டு பேருக்கே வாய்ப்பு என்பதால் முரளி விஜய், தவான், லோகேஷ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும். #MuraliVijay #KLRahul #Dhawan
Tags:    

Similar News