செய்திகள்

கோவை கிங்ஸ்க்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ்

Published On 2018-07-20 15:38 GMT   |   Update On 2018-07-20 15:38 GMT
தொடக்க வீரர்களின் அதிரடியால் கோவை கிங்ஸ்க்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ். #TTvLKK #TUTIPatriots
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் கவுசிக் காந்தி, எஸ் தினேஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கவுசிக் காந்தி 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, மூன்று சிக்சருடன் 43 ரன்களும், எஸ் தினேஷ் 42 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.



அடுத்து வந்த சுப்ரமணியன் ஆனந்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 4-வது வீரராக களம் இறங்கிய அக்சேய் ஸ்ரீனிவாசன் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 45 ரன்கள் குவித்தார். அக்சேய் ஸ்ரீனிவாசன் அவுட்டாகும்போது டூட்டி பேட்ரியாட்ஸ் 15.4 ஓவரில் 152 ரன்கள் குவித்திருந்தது.



அதன்பின் டூட்டி பேட்ரியாட்ஸின் ரன்குவிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. கடைசி 26 பந்தில் 30 ரன்கள் மட்டுமே எடுத்ததால், டூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. கோவை கிங்ஸ் அணி சார்பில் நடராஜன், அஜித் ராம், பிரசாந்த் ராஜேஷ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News