செய்திகள்

டி20 அணியில் பும்ராவிற்குப் பதிலாக தீபக் சாஹர் சேர்ப்பு

Published On 2018-07-01 12:26 GMT   |   Update On 2018-07-01 12:26 GMT
கட்டை விரல் முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் இந்தியா 2-0 என எளிதாக வெற்றி பெற்றது.

இந்நிலையில், அந்த தொடரின்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.



பும்ராவுக்கு அயர்லாந்து அணியுடனான இரண்டாவது போட்டியின்போது இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. வாஷிங்டன் சுந்தருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது.

பும்ராவிற்குப் பதில் தீபக் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான வகையில் பந்து வீசினார். மேலும், தற்போது நடைபெற்று வரும் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அசத்தி வருகிறார். இதனால் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. #JaspritBumrah #WashingtonSundar #BCCI #INDvENG #ENGvIND
Tags:    

Similar News