செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல்நாளில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்ப்பு

Published On 2018-06-14 13:14 GMT   |   Update On 2018-06-14 13:14 GMT
தவான், விஜய் சதத்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது. #INDvAFG
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் இடம்பிடித்தனர்.

தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் முதல்நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே சதம் அடித்து அசத்தினார்.

தவான் சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 27 ஓவரில் 158 ரன்கள் குவித்திருந்தது. தவான் 104 ரன்னுடனும், முரளி விஜய் 41 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், தவான் 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு தவான்- முரளி விஜய் ஜோடி 28.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது.

2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதன்பின் விஜய் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். முரளி விஜய் சத்ததை நெருங்கிய நேரத்தில் மழை குறுக்கீட்டது. இதனால் இந்தியா 45.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்கள் எடுத்திருந்தார்.



மழை நீடித்ததால் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் 99 ரன் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் முரளி விஜய் 143 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் இந்தியாவின் ஸ்கோர் 105 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். 280 ரன்னில் இந்த ஜோடி பிரிந்தது.



அதன்பின் வந்த புஜாரா 35 ரன்னிலும், ரகானே 10 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். சுமார் 8 வருடத்திற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும், அஸ்வின் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 2 விக்கெட்டும், வாஃபாதர், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News