செய்திகள்
விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் பங்கு கேட்கும் அரியானா அரசு
அரியானா அரசு அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டுள்ளது. #HaryanaGovt #SportsDevelopmentFund
சண்டீகர்:
அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டுள்ளது.
அரியானா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டு வீரர்கள் தொழில் அல்லது பங்கேற்பாளர்களாக பங்குபெறும் போட்டிகளுக்கு எடுக்கும் அசாதாரண விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படாமல், முழு வருமானத்தையும் விளையாட்டு சங்கத்துக்கு மாற்றப்படும், என கூறியுள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனையான கீதா போகத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த திட்டம் அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை என்பதால் அவர்களை இந்த திட்டமானது பாதிக்கும் என கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 22 பதக்கங்கள் வென்று அசத்தினர். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதே சமயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை குறைக்க மாநில அரசு திட்டமிட்டது. இதன்காரணமாக வீரர்கள் அந்த விழாவில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #HaryanaGovt #SportsDevelopmentFund